

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து தயாரிக்க இருக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராக இருக்கிறது.
'இது என்ன மாயம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய். இப்படத்தை இயக்குநர் பிரபுதேவா ஆரம்பித்திருக்கும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.
முன்னதாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத நிலையில் தற்போது பிரபுதேவா தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குநர் விஜய்.
இப்படத்தின் நாயகனாக பிரபுதேவா நடிக்க, நாயகியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராக இருக்கிறது. இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் சோனு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன் பணியாற்ற இருக்கிறார்.
பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பாப்கார்ன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
தற்போது பிரபுதேவா, தமன்னா, சோனு ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.