மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் நிகழ்ச்சி: 'கன்னித்தீவு' குறித்து ரோபோ ஷங்கர் பகிர்வு

மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் நிகழ்ச்சி: 'கன்னித்தீவு' குறித்து ரோபோ ஷங்கர் பகிர்வு
Updated on
1 min read

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் 'கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0' மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நடிகர் ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் நேற்று (01.08.21) முதல் 'கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0' என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஞாயிறுதோறும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், மதுமிதா, ஷகிலா உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். முதல் எபிசோடில் நடிகை வரலட்சுமி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சி குறித்து ரோபோ ஷங்கர் கூறியதாவது:

''திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் கடும் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் நிகழ்ச்சியாக ‘கன்னித்தீவு' இருக்கும் என்று நம்புகிறேன். வழக்கமான நிகழ்ச்சிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி இது''.

இவ்வாறு ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in