புலி நஷ்டஈடு கோரும் விநியோகஸ்தர்கள்: போக்கிரி ராஜாவுக்கு சிக்கல்

புலி நஷ்டஈடு கோரும் விநியோகஸ்தர்கள்: போக்கிரி ராஜாவுக்கு சிக்கல்
Updated on
1 min read

'புலி' படத்துக்கு நஷ்டஈடு கோரி, அப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்பாக வெளிவரும் 'போக்கிரி ராஜா' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்தார்கள்.

இப்படம் மக்கள் மத்தியில் பெரும் தோல்வியடைந்தது மட்டுமன்றி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நஷ்டஈடு எதுவும் விநியோகஸ்தர்களுக்கு தரப்படவில்லை.

இந்நிலையில், 'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் பிப்ரவரி 26ம் தேதி வெளிவர இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடித்திருக்கும் இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிறார்.

தற்போது, 'போக்கிரி ராஜா' படத்துக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது. 'புலி' படத்தின் நஷ்டஈடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகே இப்படத்தை வெளியிட முடியும் என்று சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து 'புலி' படத்தின் விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசிய போது, "'புலி' படத்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக புகார் அளித்திருப்பது உண்மை தான். இதுவரை அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

'போக்கிரி ராஜா' திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in