சண்டக்கோழி 2 கைவிடப்பட்டது: அறிவுரையுடன் விஷால் அறிவிப்பு

சண்டக்கோழி 2 கைவிடப்பட்டது: அறிவுரையுடன் விஷால் அறிவிப்பு
Updated on
1 min read

'சண்டக்கோழி 2' படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். முத்தையா இயக்கத்தில் 'மருது' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 'சண்டக்கோழி 2' கைவிடப்படுகிறது" என்று தனத் ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருக்கிறார்.

'சண்டக்கோழி 2' படத்துக்கான கதை விவாதம் உள்ளிட்டவை மிகவும் தீவிரமாக நடைபெற்ற வந்த சமயத்தில் விஷாலின் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in