

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அரங்குகள் அமைத்துப் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் வெளிப்புறங்களில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது இதனைப் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது படக்குழு.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளார் மணிரத்னம். புதுச்சேரி படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதுவரை 70% படப்பிடிப்பை முடித்துவிட்டார் மணிரத்னம். இந்தப் படப்பிடிப்புடன் மீதியையும் முடித்துவிடுவாரா என்பது விரைவில் தெரியவரும்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.