‘ஜெமினி’ படத்துக்காக ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கிரண் பகிர்வு

‘ஜெமினி’ படத்துக்காக ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கிரண் பகிர்வு
Updated on
1 min read

‘ஜெமினி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் ரஜினி பட வாய்ப்பைத் தவறவிட்டதாக நடிகை கிரண் கூறியுள்ளார்.

தமிழில் ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண். இப்படம் பெற்ற மாபெரும் வரவேற்பால் தொடர்ந்து முன்னணி நடிகையாக கிரண் வலம் வந்தார். அஜித் நடித்த ‘வில்லன்’, கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’, பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு ‘சகுனி’, ‘ஆம்பள' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது பெருமளவில் திரைப்படங்களில் தலைகாட்டவில்லையென்றாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கடந்த ஆறு மணி நேரமாக ‘பாபா’ படத்தின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்ட காரணமாகக் கூட இருக்கலாம். அப்போது நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்''.

இவ்வாறு கிரண் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in