

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக விஷால் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.
தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக விஷாலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எங்கே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்? எதற்காக நமக்கு சென்சார் போர்டு? ஏன் இந்த பரபரப்பான செயல்பாடு? ஏன் எப்போதும் திரைப்படத் துறை குறிவைக்கப்படுகிறது? முதலில் ஜிஎஸ்டி, பின்னர் பைரசிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமே இல்லை".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.