சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த இயக்குநர் விஜய்

சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த இயக்குநர் விஜய்
Updated on
1 min read

'தலைவி' படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படத்தையும் இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் விஜய்.

கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவி' படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் தனது அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். எப்போதுமே குறைந்த நாட்கள் திட்டமிட்டு ஒரு படத்தைச் சரியாக எடுத்து முடித்துவிடும் பழக்கமுடையவர் விஜய். அதேபோல் இந்த கரோனா ஊரடங்கு சமயத்தில் 4 நாயகிகளை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஓடிடி தளத்துக்காக மட்டுமே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளார். கவுரவக் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

எந்த ஓடிடியில் வெளியீடு என்பது முடிவானவுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் உள்ளிட்டவை வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in