Published : 25 May 2021 05:43 PM
Last Updated : 25 May 2021 05:43 PM

கவுண்டமணியின் 'திடீர்' கவுன்ட்டர்: இது 'மன்னன்' சுவாரசியம்

சென்னை

கவுண்டமணியின் திடீர் கவுன்ட்டரால் ‘மன்னன்’ படப்பிடிப்புத் தளத்தில் அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

1992-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மன்னன்'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் ரஜினி - கவுண்டமணி இருவரது காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை. இப்போதும் தினமும் காமெடி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் காமெடி காட்சிகளைப் படமாக்கும்போது, கவுண்டமணியின் கவுன்ட்டர் வசனங்களால் படக்குழுவினர் சிரிப்பில் மூழ்கியுள்ளனர்.

விஜயசாந்தியிடம் பொய் சொல்லிவிட்டு ரஜினி - கவுண்டமணி இருவருமே திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சொல்வார்கள். முதல் டிக்கெட் எடுப்பவருக்கு செயின், 2-வது டிக்கெட் எடுப்பவருக்கு மோதிரம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுப்பார்கள். இந்தக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார் பி.வாசு.

டிக்கெட் எடுத்துவிட்டு ரஜினி - கவுண்டமணி இருவருமே வெளியே வரவேண்டும். ஆனால், சிறிது நேரமாக வரவில்லை. சற்று நேரம் கழித்து ரஜினி சட்டையைக் கையில் வைத்துக்கொண்டு, கண்ணாடியில் ஒருபுறம் இல்லாமல் வெளியே வந்துள்ளார். பின்பு கையில் வைத்திருந்த சட்டையைப் பிழிந்துகொண்டு அணிவார். நிஜத்தில் பி.வாசு இந்தக் காட்சியை இப்படி எழுதவே இல்லை. ரஜினியின் இந்த மெனக்கெடலைப் படக்குழுவினர் வெகுவாக ரசித்துள்ளனர்.

ரஜினியுடன் அந்தக் காட்சியில் உடன் வரும் கவுண்டமணி இதை உன்னிப்பாகக் கவனித்துள்ளார். பின்பு அடுத்து வரும் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துள்ளார். விஜயசாந்தியிடம் பரிசுக்கான செயின், மோதிரம் இரண்டையும் வாங்கப் போகும் போது, "ஆனாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா... இந்த ஓட்டை கண்ணாடி போட்டு எப்படி துணிஞ்சு முன்னாடி நிக்கிறீயோ" என்று கவுன்ட்டர் வசனம் போட்டுள்ளார்.

ஸ்கிரிப்ட் பேப்பரில் இந்த வசனம் இல்லையாம். கவுண்டமணியின் சமயோசிதமான இந்த கவுன்ட்டரால் படக்குழுவினர் சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர். படம் வெளியானவுடனும் இந்த வசனமும் மிகவும் பிரபலமானது.

அதேபோல், விஜயசாந்தி வீட்டின் முன்பு தொழிலாளிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருப்பார்கள். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது ரஜினி மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். ஆனால், கவுண்டமணியோ கவுன்ட்டர் வசனங்கள் பேசிக் கொண்டே இருப்பார். அப்போது பல டேக்குகள் வாங்கியிருக்கிறார் ரஜினி. "இவர் இப்படி வசனம்போது எப்படி சார். நான் சீரியஸாக இருக்க முடியும்" என்று பி.வாசுவிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

அந்தக் காட்சிகளை இப்போதும் உற்று கவனித்தால், ரஜினி ஒரு காட்சியில் சிரித்துக் கொண்டிருப்பார்.

இன்று கவுண்டமணியின் பிறந்த நாள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x