கரோனா பாதிப்பு: பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார்

கரோனா பாதிப்பு: பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார்
Updated on
1 min read

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கரோனா நோய் தொற்று பாதிப்பால் சென்னையில் இன்று (மே 7) காலமானார். அவருக்கு வயது 78.

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான கல்தூண் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் திலக். டைகர் தாத்தாச்சாரி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் இவர் நடித்துள்ளார். பெரும்பாலும் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலேயே திலக் தோன்றியுள்ளார்.

சிறிது காலம் ஏவிஎம் ஸ்டூடியோஸில் உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். சின்னத்திரை தொடர்கள் பிரபலமான காலகட்டத்தில் பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் இருந்து வந்த நடிகர் திலக்கின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா இரண்டாவது அலையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மே 6ஆம் தேதி நடிகர் பாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in