‘ஆட்டோகிராஃப்’ படம் மூலம் பிரபலமான கோமகன் கரோனாவால் மரணம்

‘ஆட்டோகிராஃப்’ படம் மூலம் பிரபலமான கோமகன் கரோனாவால் மரணம்
Updated on
1 min read

‘ஆட்டோகிராஃப்’ படத்தில் வரும் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் மூலம் பிரபலமான கோமகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஆட்டோகிராஃப்'. இதில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்றது கோமகன் இசைக்குழு. முழுக்கப் பார்வையற்றவர்களால் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, 'ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலின் இறுதியில் கோமகனும் உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார்.

ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் கோமகனுக்கு அரசு வேலை கிடைத்தது. இடையிடையே கச்சேரிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக கோமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சென்னை ஐ.சி.எஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் கோமகனின் உயிர் பிரிந்தது..

கோமகனுக்கு அனிதா என்ற மனைவியும் மோனஸ், மோவின் என இரு மகன்களும் உள்ளனர். கோமகனுக்கு சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in