Last Updated : 16 Dec, 2015 11:28 AM

 

Published : 16 Dec 2015 11:28 AM
Last Updated : 16 Dec 2015 11:28 AM

பீப் பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார்: சிம்பு

'பீப்' பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பாடல் 'யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 'பீப்' பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு, "யாருடைய கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனிருத், "‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அதை எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது போலீஸ் சம்மன், வழக்குகள் என 'பீப்' பாடல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிம்பு "சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராகவுள்ளேன். ஓடி ஒளியமாட்டேன். எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். எனக்கு நேர்மையின் மீதும், உண்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x