கரோனாவால் 'சூர்யா 40' படப்பிடிப்பிலும் நெருக்கடி

கரோனாவால் 'சூர்யா 40' படப்பிடிப்பிலும் நெருக்கடி
Updated on
1 min read

கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், 'சூர்யா 40' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. கரோனா தொற்று ஏற்பட்டதால் இதன் படப்பூஜையில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி வீட்டில் ஓய்வில் இருந்தார் சூர்யா. மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காகக் கூட்டமான இடத்தில் நடக்கும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. ஆனால், தற்போது கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் அவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து இந்த சண்டைக் காட்சியை எடுப்பது சாத்தியமில்லை என்று படக்குழு உணர்ந்துள்ளது. இதனால் இந்த சண்டைக் காட்சியைப் பின்னொரு நாளில் எடுக்கலாம் என்று ஒத்திவைத்துள்ளனர்.

அண்மையில் மதுரையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இங்கு கரோனா நெருக்கடி சூழல் சற்று தளர்ந்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்குவது என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் மாறி மாறி நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in