

மிக விரைவாக விவேக் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார் என்று நயன்தாரா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஏப்ரல் 17) காலை உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது வரை விவேக்கிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விவேக்கின் மறைவு தொடர்பாக நயன்தாரா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக 'விஸ்வாசம்' படத்தில். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்"
இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.