

தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த 'நாயகன்', ரஜினிகாந்தின் 'பொல்லாதவன்' ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'வேதாந்த தேசிகர்' என்ற வரலாற்றுப் பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளது.
ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிகச் சேவையை, வாழ்க்கையை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல் முறையாக முக்தா பிலிம்ஸ் செய்துள்ளது. இத்திரைப்படத்தை முக்தா சீனிவாசனின் புதல்வர் முக்தா சுந்தர் இயக்கி இருப்பதோடு, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
இப்படத்தில் வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன்யாசருமான துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி, நடித்துள்ளார். இவர் வேதாந்த தேசிகரின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திறம்பட ஆராய்ந்தவர். மேலும், இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியான பிராக்ருத மொழியை இப்படத்தில் பயன்படுத்தவும் செய்திருக்கிறார். ஏனென்றால் வேதாந்த தேசிகர் ப்ராக்ருத மொழியில் பாடல் எழுதும் அளவுக்குப் பரிச்சயம் உடையவராம்.
துருக்கியர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோயிலை எப்படி வேதாந்த தேசிகர் காத்து நின்றார் என்பதே இப்படத்தின் கதை. அதை மிக அழகாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் முக்தா சுந்தர். படத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் உடன் ஸ்ருதி பிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் உள்படப் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய அம்சமாக மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் முக்தா ரவி கூறும்போது, ''இன்று ஆன்மிகம் விரும்பும் பெரியவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிக்கல் இருப்பதால் இப்படம் நேரடியாக முக்தா பிலிம்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தைப் பார்க்க முக்தா பிலிம்ஸ் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் லாகின் செய்து பார்க்கும் வசதியும் இருக்கிறது.
புதிதாக முக்தா பிலிம்ஸ் பெயரில் ஓடிடி தளம் தொடங்கி அதில் முதலாவதாக 'வேதாந்த தேசிகர்' படத்தை வெளியிடுகிறோம். இனி தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களையும் இந்த ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம். அதோடு ரிலீஸுக்குத் தயாராகி வெளியிட முடியாமல் உள்ள சிறு முதலீட்டுப் படங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம்.
வருகிற 18ஆம் தேதி லைவிற்கு வரும் இப்படத்தை 25ஆம் தேதி முதல் அனைவரும் கண்டு மகிழலாம். ஓர் ஆன்மிக அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்'' என்று தயாரிப்பாளர் முக்தா ரவி தெரிவித்தார்.