Published : 10 Apr 2021 08:01 PM
Last Updated : 10 Apr 2021 08:01 PM

என் வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தியாசமானது: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி 

என் வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தியாசமானது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார்.

பலரும் இந்தக் கதை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதி என்று கருத்து தெரிவித்து வருகிறார்களே. அது உண்மையா?

என் வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தியாசமானது. நான் இசைத் துறையில்தான் செல்ல வேண்டும் என என் அம்மா கூறினார். ஆனால், பொது வாழ்வில் யாரும் இசைத் துறைக்குச் செல்லும்படி தங்கள் பிள்ளைகளிடம் கூற மாட்டார்கள். அரசு வேலைக்குச் செல்லும்படி அறிவுறுத்துவர். ஆனால் தற்போது இந்தத் தலைமுறை மாறிக் கொண்டிருக்கிறது. என்னுடைய அனுபவங்களில் இருந்து திரட்டிய விஷயங்களை வைத்து இந்தப் படத்தில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அது எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்.

பல்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறீர்கள். அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன?

நான் பல மொழிகளில் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றன. சில வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தின் கதை, தயாரிப்பு, இசை ஆகியவை எந்த மொழியில் பார்த்தாலும் மக்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

இசையைப் பின்னணியாகக் கொண்டு பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் என்ன புதுமையாக இருக்கும்?

இசைப் பின்னணியில் நிறைய படங்கள் வந்துள்ளன. இந்தப் படத்தில் நான் சொல்ல வரும் விஷயம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x