கரோனா பரவல் அதிகரிப்பு: தலைவி வெளியீடு ஒத்திவைப்பு

கரோனா பரவல் அதிகரிப்பு: தலைவி வெளியீடு ஒத்திவைப்பு
Updated on
1 min read

கரோனா பரவலால் ‘தலைவி’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கரோனா பரவலால் ‘தலைவி’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் இன்று (ஏப். 10) அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இப்படத்தை உருவாக்க ஏராளமான தியாகங்களை நாங்கள் செய்துள்ளோம். இந்த சவாலான பயணத்தில் எங்களோடு உறுதுணையாக இருந்த படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படம் பல மொழிகளிலும் தயாராகியிருந்தாலும் அனைத்து மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் எண்ணற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எங்கள் படம் வரும் ஏப். 23 அன்று வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ‘தலைவி’ பட வெளியீட்டை ஒத்திவைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in