ஜனநாயகக் கடமையைச் செய்யவில்லையா?- லிங்குசாமி விளக்கம்

ஜனநாயகக் கடமையைச் செய்யவில்லையா?- லிங்குசாமி விளக்கம்
Updated on
1 min read

வாக்களிக்கவில்லை என்று வெளியான செய்திக்கு இயக்குநர் லிங்குசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு முடிந்தது. ரஜினி, கமல், விஜய், அஜித் தொடங்கி பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள்.

திரையுலகப் பிரபலங்கள் வாக்களித்துவிட்டு, கையில் மையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். இந்தத் தேர்தலில் வாக்களிக்காத பிரபலங்கள் பட்டியலைப் பலரும் வெளியிட்டார்கள். அதில் லிங்குசாமியின் பெயரும் இடம்பெற்றது.

இது தொடர்பாக லிங்குசாமி தான் வாக்களித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள சிறிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், என் வாக்கைச் செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன். சில ஊடகங்கள் நான் வாக்கைச் செலுத்தவில்லை என்று தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையைச் செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையைச் சரியாகச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்"

இவ்வாறு லிங்குசாமி தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in