ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு; ஆகஸ்ட் வெளியீடு: 'விஷால் 31' படக்குழுவினர் மும்முரம்

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு; ஆகஸ்ட் வெளியீடு: 'விஷால் 31' படக்குழுவினர் மும்முரம்
Updated on
1 min read

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, ஆகஸ்ட்டில் வெளியிட 'விஷால் 31' படக்குழு முடிவு செய்துள்ளது.

'சக்ரா' படத்தைத் தொடர்ந்து 'எனிமி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்கவுள்ளார் விஷால். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இந்தப் படம் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் மாதத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. விஷால் நடிப்பில் தயாரான படங்களுள் குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கவுள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'விஷால் 31' என அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in