Published : 28 Mar 2021 05:54 PM
Last Updated : 28 Mar 2021 05:54 PM

ராணா அனுப்பிய பரிசு; நன்றி சொன்ன த்ரிஷா

நடிகர் ராணா தனக்கு அனுப்பிய பரிசுக்கு நடிகை த்ரிஷா நன்றி கூறிப் பகிர்ந்துள்ளார். இதற்கு ராணா பதில் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ராணாவின் 'காடன்' படம் இந்த வாரம் வெளியானது. தெலுங்கில் 'ஆரண்யா' என்கிற பெயரிலும், இந்தியில் 'ஹாத்தி மேரே ஸாத்தி' என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையுலகில் தனது நண்பர்களுக்குப் பரிசுப் பொருட்கள் அனுப்பி வாழ்த்துகள் பெற்றுள்ளார் நடிகர் ராணா. முன்னதாக, நடிகைகள் சமந்தா, அனுஷ்கா ஆகியோர் ராணா அனுப்பிய பரிசுப் பொருட்களுக்கு நன்றி தெரிவித்து அவரது 'காடன்' படம் வெற்றி பெற வாழ்த்தினர்.

தற்போது நடிகை த்ரிஷாவும் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "ராணா, விஷ்ணு வாழ்த்துகள். பரிசுகளுக்கு நன்றி. 'காடன்' திரைப்படம் வெற்றி பெற உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு, ராணா அனுப்பிய பரிசுகளைப் புகைப்படம் எடுத்து அத்துடன் சேர்த்துப் பகிர்ந்தார் த்ரிஷா.

த்ரிஷாவின் இந்தப் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த ராணா, 'உங்கள் ஆதரவுக்கு நன்றி' என த்ரிஷாவுக்கு பதில் நன்றி குறிப்பிட்டு, அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

த்ரிஷாவும் ராணாவும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து நீண்ட நாட்கள் இருவரும் மவுனம் காத்து வந்தனர். 'பாகுபலி' வெளியான சமயத்தில் இயக்குநர் கரண் ஜோஹரின் நிகழ்ச்சி ஒன்றி ராணா கலந்துகொண்டார். அப்போது அவரது காதல் குறித்து கரண் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்திருந்த ராணா, தற்சமயம் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், தானும் த்ரிஷாவும் நீண்டகால நண்பர்கள், சில காலம் காதலித்து வந்தோம். ஆனால், சில காரணங்களால் பிரிந்துவிட்டோம் என்று பதிலளித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x