

'ஜகமே தந்திரம்' திரைப்படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்க வெளியீட்டுக்காகவே ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது. திடீரென்று 'ஜகமே தந்திரம்' நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவியது.
இது தொடர்பாகப் படக்குழுவினர் யாருமே எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் ஓடிடி செய்தி உண்மையாக இருக்கும் எனப் பலரும் நம்பத் தொடங்கினார்கள். மேலும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தனுஷே சில நாட்களுக்கு முன் ட்வீட் செய்திருந்தார்.
தற்போது தனுஷின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி ஒய்நாட் தரப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதில், "வேண்டுகோள், எங்கள் அன்புத் தலைவர் தனுஷின் வெற்றிப்படமான 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்குகளைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத் தயாரிப்பாளரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நம்புகிறோம்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.