பிப்ரவரியில் துவங்கும் டான் படப்பிடிப்பு

பிப்ரவரியில் துவங்கும் டான் படப்பிடிப்பு
Updated on
1 min read

பிப்ரவரி 2-ம் வாரத்தில் கோயம்புத்தூரில் 'டான்' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படம் 'டான்'. ஜனவரி 27-ம் தேதி இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 30 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் பணிபுரியவுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதனை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in