முடிவுக்கு வந்த 'மாஸ்டர்' ஓடிடி வெளியீட்டு சர்ச்சை: தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர்கள் சமரசம்

முடிவுக்கு வந்த 'மாஸ்டர்' ஓடிடி வெளியீட்டு சர்ச்சை: தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர்கள் சமரசம்
Updated on
1 min read

ஓடிடி தளத்தில் 'மாஸ்டர்' வெளியாகியிருப்பது தொடர்பாகத் தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் 'மாஸ்டர்' படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஜனவரி 29) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது 'மாஸ்டர்'.

திரையரங்கில் வெளியான 16 நாளில் ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். இதனால் சர்ச்சை உருவானது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிக் கூட்டம் நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது. மேலும், பெரிய பட்ஜெட் படங்களை இனிமேல் 50 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் எனவும், சிறு பட்ஜெட் படங்களை 30 நாட்களுக்குப் பிறகு வெளியிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'மாஸ்டர்' வியாபாரம் தொடர்பாக என்ன பேசினோம் என்பதைத் தெரிவிக்க இயலாது என்று முன்னணித் திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாக விசாரித்தபோது, " 'மாஸ்டர்' படத்தின் 3-வது வார வசூலைத் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பிரித்துக்கொள்ளத் தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்துதான் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது" என்று தெரியவந்தது.

மேலும், அமேசான் ப்ரைம் நிறுவனமும் 'மாஸ்டர்' படத்தை முன்னதாகவே வெளியிடுவதற்குத் தனியாகப் பெரும்தொகை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in