மீண்டும் இயக்குநராகும் 'மாநாடு' தயாரிப்பாளர்

மீண்டும் இயக்குநராகும் 'மாநாடு' தயாரிப்பாளர்
Updated on
1 min read

'மிக மிக அவசரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இதில் 'மிக மிக அவசரம்’ படத்தைத் தயாரித்தது மட்டுமன்றி, இயக்கவும் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் படத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'மாநாடு' படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றைத் தயாரித்து, இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுபூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகவுள்ளது.

இதற்காக நாவலைப் படமாக்கும் உரிமையை ம.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. தற்போது அதில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in