

இந்தியில் 'அகிரா' படத்தைத் தொடர்ந்து, இரண்டு படங்களுக்குப் பிறகே நேரடி தமிழ்ப் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடித்துவரும் 'அகிரா' இந்தி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மெளனகுரு' படத்தின் ரீமேக் ஆகும். தற்போது ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்படத்தைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது.
மகேஷ்பாபு படத்தைத் தொடர்ந்து ஓர் இந்தி படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான கதையை எழுதி முடித்துவிட்டார்கள். சல்மான்கான் தேதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தை தயாரிக்க பல்வேறு இந்தி தயாரிப்பாளர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, உருவாகும் கதையைத் தான் தமிழில் இயக்க இருக்கிறார். இதனால், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கிறார்கள் என்று அவ்வப்போது கிளம்பும் யூகங்கள் 2017-ல் தான் வெளியாகும்.