

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்ககளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய 'தில் சே' மற்றும் 'ராவணா' இந்தி படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஷாத் அலி(Shaad Ali) 'ஓ காதல் கண்மணி' படத்தின் ரீமேக்கை இயக்க இருக்கிறார்.
'ஆஷிக்கி 2(AASHIQUI 2 )' படத்தின் ஜோடியான ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.