’டாக்டர்’ படப்பிடிப்பு முடிந்தது: கேஜேஆர் ஸ்டூடியோஸ் பகிர்வு

’டாக்டர்’ படப்பிடிப்பு முடிந்தது: கேஜேஆர் ஸ்டூடியோஸ் பகிர்வு
Updated on
1 min read

’டாக்டர்’ படப்பிடிப்பு நிறைவைடைந்ததாக படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' உருவாகியுள்ளது. சிவாகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தெலுங்கில் 'கேங் லீடர்' படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் இதில் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது. அனிருத் இசையமைக்கிறார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தடைபட்டது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்தப் படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது, பிறகு தீபாவாளியின் போது 2021 கோடை விடுமுறை வெளியீடு என்பதை படக்குழு உறுதிசெய்தனர்.

தற்போது ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு மொத்தம் முடிந்துவிட்டதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் பகிர்ந்துள்ளனர். தங்களது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த கரோனால ஒரு படத்தை எடுத்து முடிக்கறதுக்குள்ள நாங்க படற பாடு இருக்கே அய்யய்யய்யோ. டாக்டர் படப்பிடிப்பு முடிந்தது” என்று புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர்.

'டாக்டர்' படத்தை முடித்துவிட்டு, ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தவுள்ளார் .

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in