

சமூக வலைதளங்கள் மூலமாக நடிகர் விஜய்யை அவமானப்படுத்துவதாக, அவருடைய ரசிகர்கள் போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்கத் தலைவர் ஜோஸ்பிரபு தலைமையில் ரசிகர்கள் ஒன்றிணைந்து நாகர்கோவில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள்.
அம்மனுவில், "நடிகர் விஜய் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விஜய்யையும், அவருடைய குடும்பத்தாரையும் சமூகவலைதளம் மூலம் அவமானப்படுத்தியும், அருவருக்கத்தக்க, சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்தும் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட வலைதள முகவரியில் இருந்த பக்கம் நீக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்தப் பக்கம் செயல்படத்தொடங்கி, வழக்கம்போல் அவதூறுகளை பரப்பி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சோபலட்ச ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.
எனவே விஜய் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் இணையதளத்தை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள அருவருக்கத்தக்க பக்கங்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.