Published : 28 Dec 2020 04:02 PM
Last Updated : 28 Dec 2020 04:02 PM

விஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள்

கோவை

விஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை (டிசம்பர் 29) மதியம் 12:30 மணியளவில் 'மாஸ்டர்' வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, இன்று (டிசம்பர் 28) திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அச்சந்திப்பில் 'மாஸ்டர்' வெளியீடு மற்றும் விஜய் எடுத்த முடிவு குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:

" 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி. இன்று காலை தயாரிப்பாளர் எங்களிடம் இதனை உறுதிப்படுத்தினார். ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' திரைக்கு வரும். இதுவரை விஜய் படங்கள் அனைத்துமே தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'மாஸ்டர்'.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு பெரிய படம் வெளியாகிறது. இதற்கு முழுக்காரணமும் விஜய்தான். கடந்த 10 மாதங்களாகத் திரையரங்குகளில் மட்டுமே வெளியாக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் இருந்தார் விஜய். அவருக்குத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதேபோல் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு 200 கோடி ரூபாய் வரையிலான முதலீடு கைக்கு வராமல் உள்ளது. ஆனால், திரையரங்கில்தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்கு எங்களது நன்றி.

100% இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். கடந்த 10 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியிருப்பதால், பெரும் பாதிப்பை அடைந்துள்ளோம். 2021-ம் ஆண்டுத் தொடக்கத்தில் 100% இருக்கைக்கான அனுமதி கிடைத்தால் பெரும் மகிழ்ச்சியடைவோம்.

கடந்த 10 மாதங்களாகப் பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. ஆகையால், எந்தவொரு பெரிய படமும் தயாராக இல்லை. பெரிய நடிகர்களை வளர்த்துவிட்டது திரையரங்குகளும், ரசிகர்களும்தான். தன்னை வளர்த்துவிட்ட திரையரங்குகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அவரைப் போல் ஒவ்வொரு நாயகரும் நினைத்தால்தான் சினிமா வாழும்.

பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாவதைத் தடுக்க முடியாது. ஆனால், நடிகர்கள் விஜய் போல் நினைத்துப் பார்க்க வேண்டும். 'மாஸ்டர்' படத்தை அனைத்து ஓடிடி தளங்களும் போட்டிப் போட்டுக் கேட்டன. ஆனால், திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். அவரைப் போல் அனைத்து நாயகர்களும் நினைக்க வேண்டும்.

டிவி, டிவிடி, ஓடிடி என எந்தவொரு தொழில்நுட்பம் வந்தாலும், திரையரங்குகள் நல்ல முறையில்தான் போய்க் கொண்டிருக்கின்றன. விஜய் மாதிரி அனைத்து நடிகர்களும் ஒத்துழைத்தால், தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்குப் போய்ச் சேரும். திரையரங்குகள் மீது விஜய் வைத்திருக்கும் அன்பால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளோம்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x