

கரோனாவை அலட்சியமாகக் கருத வேண்டாம் என்று சிகிச்சையில் குணமடைந்து திரும்பிய சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தார் சரத்குமார். உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்கும் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். ஆனால், அடுத்த சில தினங்களில் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சரத்குமார் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து இன்று (டிசம்பர் 13) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் சரத்குமார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் சரத்குமார் கூறியிருப்பதாவது:
"டிசம்பர் 8 அன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்குப் பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறேன்.
உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயகுமார், ரவிக்கிரண், சந்திரகாந்த், செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மைப் பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும்தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.
மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள், சமத்துவச் சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்.
இருப்பினும், கரோனா தொற்று உலகில் பல்வேறு மக்களைத் தற்போதும் பாதித்து வருகிறது. கரோனாவை அலட்சியமாகக் கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்குப் பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும்போது, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, சுய பாதுகாப்பை உறுதி செய்து நோய்த்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்".
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.