வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு: கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு: கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'தலைவி' படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக கங்கணா ரணாவத் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கப்பட்டு இன்று முடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி'யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாகக் கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. 'தலைவி' படக்குழுவினருக்கு நன்றி".

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

'தலைவி' படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in