

தொடர்ச்சியாக 'பாகுபலி 3' குறித்த வதந்திதாக எழுந்துக் கொண்டே இருந்ததால், தனது முடிவை வெளிப்படையாக அறிவித்தார் ராஜமெளலி
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்து, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய இப்படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.
அக்டோபர் 24ம் தேதி மா தெலுங்கு தொலைக்காட்சியில் 'பாகுபலி' திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பானது. அன்றைய தினம் சமூக வலைதளங்களில் 'பாகுபலி' மூன்றாம் பாகம் வெளிவர இருக்கிறது என தகவல்கள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து ராஜமெளலி, "கதை 2-ஆம் பாகத்தோடு முடியும். நாங்கள் இழுக்க விரும்பவில்லை.
ஆனால் ’பாகுபலி உலகம்' நீங்கள் இதுவரை நினைத்துப் பார்க்காத வகையில் தொடரும். நேரம் வரும்போது விரிவாகச் சொல்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம். எனக்கு மட்டுமே அடுத்து வருவதைப் பற்றி தெரியும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'பாகுபலி 3' குறித்து பேசியிருந்தார் ராஜமெளலி. பலரும் அதனைக் குறிப்பிட்டு மீண்டும் ராஜமெளலியிடம் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
"'பாகுபலி' 3ம் பாகம் குறித்த விளக்கத்தில் நிறைய குழப்பிவிட்டேன் என நினைக்கிறேன். வருந்துகிறேன். 'பாகுபலி 3' கண்டிப்பாக உருவாகும். ஆனால், இரண்டு பாகங்களுக்காக எழுதப்பட்ட கதை நீட்டிக்கப்பட மாட்டாது. அக்கதை இரண்டாம் பாகத்தோடு முடிவடையும்.
'பாகுபலி 3' ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் உருவாக இருக்கிறது. இந்த விளக்கம் சரியாக இருக்கிறது என நினைக்கிறேன்" என்று தனது 'பாகுபலி' 3ம் பாகத்தின் முடிவை தெரிவித்தார் இயக்குநர் ராஜமெளலி.
'பாகுபலி ' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்கி, நவம்பர் 2016-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.