சித்ராவின் உடல் தகனம்: சின்னத்திரை பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

சித்ராவின் உடல் தகனம்: சின்னத்திரை பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
Updated on
1 min read

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் இன்று மாலையில் தகனம் செய்யப்பட்டது. சின்னத்திரை பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

நேற்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த கணவர் ஹேமநாத் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், சித்ரா - ஹேமநாத் இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்றது.

இன்று (டிசம்பர் 10) சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் உள்ள சித்ராவின் இல்லத்தில் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது விஜய் டிவியில் அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருமே சித்ராவின் உடலுக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து வேளச்சேரி மின் மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாலை 5:50 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவருடன் பணிபுரிந்த நடிகர்கள் பலரும் கதறி அழுத காட்சிகளைக் காண முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in