எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் பி.வாசுவுக்குப் பெரிய பங்குண்டு: குஷ்பு நெகிழ்ச்சி

எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் பி.வாசுவுக்குப் பெரிய பங்குண்டு: குஷ்பு நெகிழ்ச்சி
Updated on
1 min read

எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் இயக்குநர் பி.வாசுவுக்குப் பெரிய பங்குண்டு என்று குஷ்பு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

1990களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவான பல படங்களில் நாயகியாக நடித்தவர் குஷ்பு. பி.வாசு இயக்கத்தில் வெளியான 'நடிகன்', 'சின்ன தம்பி', 'கிழக்கு கரை', 'மன்னன்', 'ரிக்‌ஷா மாமா', 'இது நம்ம பூமி', 'அம்மா வந்தாச்சு' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் குஷ்பு. இதில் பல படங்கள் மாபெரும் வரவேற்பு பெற்றவை என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான். எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in