

1 பில்லியன் (100 கோடி) பார்வைகளை கடந்து இமாலய சாதனையை எட்டியுள்ளது 'ரவுடி பேபி' பாடல்
தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூ டியூப் சேனலில் பல சாதனைகளைப் படைத்தது. அவற்றை தனுஷ் - யுவன் கூட்டணியில் உருவான 'ரவுடி பேபி' பாடல் முறியடித்து வந்தது.
'மாரி 2' படத்தில் இடம்பெற்ற இப்பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடியுள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தான் யூ டியூப் சேனலில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்தே வைரலாகப் பரவத் தொடங்கியது.
தற்போது 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது 'ரவுடி பேபி' பாடல். 100 கோடி பார்வைகளைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற இமாலய சாதனையையும் எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்கு படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
'ரவுடி பேபி' சாதனை தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்ன ஒரு இனிமையான தற்செயல் இது. சரியாக கொலவெறி டி பாடல் வெளியான தினத்தில், 9வது வருடத்தில் ரவுடி பேபி 100 கோடி பார்வைகளை எட்டியுள்ளது. 100 கோடி பார்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியப் பாடல் இது என்பதி எங்களுக்குப் பெருமை. எங்கள் ஒட்டுமொத்தக் குழுவும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறோம்"
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.