‘போக்கிரி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய கோலா பாஸ்கர் மறைவு

‘போக்கிரி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய கோலா பாஸ்கர் மறைவு
Updated on
1 min read

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 55.

செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி, ‘வில்லு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் எடிட்டராகப் பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.

தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்தார். இப்படத்தை கோலா பாஸ்கரே தயாரித்தார்.

கடந்த சில நாட்களாகத் தொண்டைப் புற்றுநோயால் கோலா பாஸ்கர் அவதிப்பட்டு வந்தார். இதற்காகத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (04.11.20) கோலா பாஸ்கர் மரணமடைந்தார். அவரது மறைவுக்குத் தமிழ், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in