விற்பனையானது 'திரெளபதி' தொலைக்காட்சி உரிமம்
'திரெளபதி' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இயக்குநர் மோகன்.ஜியே தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.
1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், படத்திலிருந்த சர்ச்சையினால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருந்தது.
தற்போது, 'திரெளபதி' படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இதனால், படத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மேலும் லாபம் கிடைத்துள்ளது. 'திரெளபதி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார் மோகன்.ஜி.
'ருத்ர தாண்டவம்' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரிச்சர்ட் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2021-ம் ஆண்டு மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
ரிச்சர்ட் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக பரூக், இசையமைப்பாளராக ஜூபின் பணிபுரியவுள்ளனர். 'திரெளபதி' படத்தை வெளியிட்ட 7ஜி ஃபிலிம்ஸ் சிவா, தற்போதே இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
