

11 அரங்குகள் அமைத்து ஒரு அரங்குக்கு ஒரு கெட்டப் என்கிற பாணியில் படமாகிறது கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா'
'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்கு சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகார்ஜூன் உடன் இணைந்து நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி.
இந்நிலையில் படப்பிடிப்பில் ஏன் தாமதம் என்று படக்குழுவினரிடம் விசாரித்த போது, "கார்த்தி இதுவரை நடித்த படங்களை விட மிக அதிகப் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இதுவரை 3 அரங்குகளில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படத்தில் மொத்த 11 அரங்குகள் இருக்கிறது. இன்னும் 8 அரங்குகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
11 அரங்குக்கு 11 கெட்டப் என கார்த்தி மிகவும் மெனக்கிட்டு வருகிறார். படப்பிடிப்புக்கு போகும் முன்பு அந்த அரங்குக்கான கெட்டப்பை டெஸ்ட்-ஷூட் செய்து சரியாக வருமா என்று பார்த்த பின் தான் படப்பிடிப்புக்கு செல்வோம். ஆகையால் தான் இந்த தாமதம். கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.