

‘அருவா சண்ட’ படத்தின் டப்பிங் பணிகளின்போது கண் கலங்கியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
வி.ராஜா தயாரித்து நடிக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாதி ஆணவக் கொலைகளைப் பற்றிப் பேசும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை புதுமுகமான ஆதிராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளதாவது:
''சமீபகாலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய் சேதுபதியுடன் 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்தப் படத்தில் உணர்தேன். வி.ராஜா சிறப்பாக படத்தின் கதாபாத்திரத்திற்குப் பொருந்தினார்.
இது ஒரு சிறந்த கதைக்களம். படத்திற்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து கதை நாயகனாக நடித்துள்ள வி.ராஜாவுக்கு வாழ்த்துகள்''.
இவ்வாறு சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.