

எஸ்பிபி மறைவிலிருந்து தன்னால் மீண்டு வரமுடியவில்லை என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:
இந்த மைக் என்னுடைய சொற்களை வெளிப்படுத்தலாம். ஆனால் என்னுடைய சோகங்களை வெளிப்படுத்தும் சக்தி இந்த மைக்கிற்கு கிடையாது. என்னுடைய சோகத்தை விடுங்கள். இந்த மைக்கிற்கு ஒரு சோகம் உள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எஸ்பிபி சாருடன் மிகவும் பயணித்துள்ளது இந்த மைக். இந்த மைக்கின் சோகத்தை யார் சொல்லமுடியும்?
மனதுக்கு நெருக்கமான ஒரு மனிதர் எஸ்பிபி. இன்னும் என்னால் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. மற்றவர்கள் செய்வதை நான் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இளையராஜா திருவண்ணாமலை சென்று மோட்ச தீபம் ஏற்றுகிறார். நான் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றினேன்.
எஸ்பிபி-யின் திறமையையும், பண்பையும் கொண்டாட வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். எப்படி கொண்டாடுவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கும் சரணுக்கும் பெயர் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் எஸ்பிபி சார் மீது வைத்த அன்பு உன்னதமானது.
இவ்வாறு பார்த்திபன் பேசினார்