படப்பிடிப்பு தாமதத்தால் ரூ.1 கோடி இழப்பு: 'கபடதாரி' தயாரிப்பாளர்

படப்பிடிப்பு தாமதத்தால் ரூ.1 கோடி இழப்பு: 'கபடதாரி' தயாரிப்பாளர்
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட படப்பிடிப்பு தாமதத்தால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 'கபடதாரி' தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கபடதாரி'. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததால், 'கபடதாரி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

அரசு விதித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, 70-க்கும் குறைவான நபர்களைக் கொண்டு நடைபெற்ற படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 29) முடிவடைந்தது. திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன், வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவுள்ளது.

'கபடதாரி' படப்பிடிப்பு முடிந்ததை தனது ட்விட்டரில் அறிவித்துள்ள தனஞ்ஜெயன், தனது பதிவில் கூறியிருப்பதாவது:

"பல்வேறு காரணங்களால் ஏறக்குறைய 200 நாட்கள் காத்திருப்புக்குப் பின் 'கபடதாரி' படப்பிடிப்பு நேற்று முடிந்ததில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. மிகவும் சவாலான நாட்களைக் கடந்து வந்துள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் மட்டுமே 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரையுலகிற்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்".

இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in