

’ரஜினி முருகன்’ தாமதம் ஆவதால், அப்படத்தின் இயக்குநர் பொன்.ராம் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கடும் கோபம் அடைந்துள்ளார். அதனை கிண்டல் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், சென்சார் பணிகள் முடிந்தவுடன் ’ரஜினி முருகன்’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.
சென்சார் பணிகள் முடிந்தவுடன் செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால், இதற்கு முன்பு கடனை அடைத்தால் மட்டுமே இப்படத்தை வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் செப்.17ம் தேதி இப்படம் வெளியாகவில்லை.
’ரஜினி முருகன்’ தாமதத்தால் இயக்குநர் பொன்.ராம் "என்னதான் திருப்பதி உண்டியலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டினாலும் கடனை அடைக்க முடியவில்லையே....” என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
’ரஜினி முருகன்’ வெளியானால் மட்டுமே, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதால் இயக்குநர் பொன்.ராம் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.