Last Updated : 17 Sep, 2020 04:59 PM

 

Published : 17 Sep 2020 04:59 PM
Last Updated : 17 Sep 2020 04:59 PM

’ரிதம் 20’ - ’’நடிகர் அர்ஜுன், ‘ஆக்‌ஷன் கிங்’ மட்டுமில்லை, ‘ஆக்டிங் கிங்’கும் கூடத்தான்!’’ - இயக்குநர் வஸந்த் ‘ரிதம்’ நினைவுகள்

பிரமிட் பிலிம்ஸ் வி.நடராஜன் தயாரிக்க, அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் முதலானோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் வெளியானது ‘ரிதம்’. தலைப்புக்கு ஏற்றது போல், படத்தை அழகிய ஸ்ருதியுடனும் லயத்துடனும் அமைத்திருந்தார். அல்லது அப்படி அமைத்த இந்தப் படத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியிருந்தார்.

எல்லோரும் பார்க்கிற படமாக, எப்போதும் பார்க்கிற படமாக, இன்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்ததுதான் ‘ரிதம்’ படத்துக்குக் கிடைத்த வெற்றி. 2000மவாது ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது இந்தப் படம் 20 ஆண்டுகளாகின்றன.

‘ரிதம்’ அனுபவங்கள் குறித்து இயக்குநர் வஸந்த் எஸ்.சாயிடம் (வஸந்த்) கேட்டோம்.

இயக்குநர் வஸந்த் தெரிவித்ததாவது:

‘’அர்ஜூன் எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர். அவர் ‘ஆக்‌ஷன் கிங்’ மட்டுமெல்லாம் இல்லை. அவர் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததால், அவரை ஆக்‌ஷன் கிங் என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவர் ’ஆக்டிங் கிங்’ அப்படீங்கறது, என் மனசுல இருந்துக்கிட்டே இருக்கும். அவரோட எல்லாப் படங்கள்லயுமே, சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார் அர்ஜூன்.

எனக்கு முன்னாடி அவரை வைச்சு பலரும் எடுத்த படங்களிலெல்லாம் அர்ஜுனோட நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். ’இப்படி இருக்கறவங்களை அப்படிப் பாக்கறது’ன்னு சொல்வோமில்லையா? இவ்ளோ படங்கள்ல நடிச்சு, நமக்கெல்லாம் ஆக்‌ஷன் கிங்னு தோணின அர்ஜுனை, முழுக்க முழுக்க, இயல்பான, அடுத்த வீட்டுப் பையன்னு சொல்லுவோமே... ஒரு நார்மலான மனுஷனா, பெரிய ஹீரோயிஸம்லாம் எதுவும் இல்லாம, சாஃப்ட்டா ஒரு ஹீரோவா, ரொம்ப நல்லவரா, அப்பா அம்மாவை பாத்துக்கறவரா... என் கதைல இருக்கிற ‘கார்த்திக் சார்’ங்கற ஒரு கதாபாத்திரமா அவரை பாத்தேன். யோசிச்சேன். உருவகிக்க முடியும்ங்கற நம்பிக்கைலதான் அவர்கிட்ட அப்ரோச் பண்ணினேன்.

இதுல ரொம்ப நல்ல விஷயம் என்னன்னா... இதையெல்லாம் ஒரு டைரக்டரா நான் நினைச்சிடலாம். ஆனா, அதுவரைக்கும் தன் இமேஜ் இருக்கிற படங்கள்ல நடிச்சவர். அஞ்சு ஃபைட், நாலு ஃபைட் இருக்கிற படங்கள்ல நடிச்சவர். வில்லன்களை அடிச்சு, உதைச்சு, துவைக்கிற பெரிய ஹீரோயிஸ கேரக்டர்ல நடிக்கிற அவர், இப்படியொரு வித்தியாசமான கதைல, கேரக்டர்ல நடிக்கலாம்னு அவருக்கும் தெரிஞ்சிச்சு.தோணுச்சு. அவர் ஒத்துக்கிட்டார். அதனாலதான், இன்னிக்கி வரைக்கும் ‘ரிதம்’ முக்கியமான படமா, முக்கியமான விஷயமா வந்திருக்கு.

யாரோ நடிக்கிறது வேற. இதுமாதிரி கேரக்டர்ல அர்ஜுன் நடிக்கிறது வேற. அர்ஜுன் சார், எனக்கு பெஸ்ட் பர்ஃபாமென்ஸையும் கொடுத்தாரு. அவரே டைரக்டர்ங்கறதால, கதையோட அவுட்லைன் மட்டும்தான் அவருக்குச் சொன்னேன். சொன்னதுமே அவருக்கும் புரிஞ்சிருச்சு. ‘கண்டிப்பா பண்ணுவோம் வஸந்த்’னு சந்தோஷமா சொன்னாரு. அவருக்கும் இப்படியொரு கதையுள்ள படத்துல நடிக்கணும்னு விருப்பம் இருந்துச்சு. அதுலயும், என்னோட ‘ஆசை’, ‘கேளடி கண்மணி’ மேலல்லாம் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. எம் மேலயும் இருந்தது.

98வது வருஷம்... அர்ஜுன் சாரைப் பாத்து கதை சொன்னேன். அவரோட கால்ஷூட்டுக்காக வெயிட் பண்ணி இந்தப் படம் பண்ணினோம். ரொம்ப திருப்தியா நடிச்சுக் கொடுத்தார். ’என் படங்களிலேயே ‘ரிதம்’ ரொம்ப முக்கியமான படம்’னு அர்ஜுன் சாரே நிறைய பேட்டிகள்ல சொன்னாரு.

எனக்குமே ‘கார்த்திக் சார்’ங்கற கேரக்டர்ல அர்ஜூன் சார் பண்ணினது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு’’.

இவ்வாறு இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் (வஸந்த்) தன்னுடைய ‘ரிதம்’ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x