இந்தி ஊடகங்களைச் சாடியுள்ள பி.சி.ஸ்ரீராம்

இந்தி ஊடகங்களைச் சாடியுள்ள பி.சி.ஸ்ரீராம்
Updated on
1 min read

இந்தி ஊடகங்களைக் கடுமையாகச் சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு இந்தித் திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கங்கணா ரணாவத் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது சுஷாந்த் சிங் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து தினமும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், போதைப் பொருட்கள் உபயோகித்தது தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் சகோதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தினமும் இது தொடர்பான செய்திகளையே இந்தி ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மும்பையில் ஒரு மரணம் நிகழ்ந்தது. இரண்டு மாதங்கள் ஊடகங்கள் பித்துப் பிடித்தது போலத் திரிந்தன, பார்வையாளர்களையும் அப்படியே ஆக்கின. ஊடகங்கள் செய்யும் விசாரணை மிக ஆபத்தானது. நாம் அந்த வலையில் சிக்கிவிட்டோம். ஊடகம் செய்யும் விசாரணை பொது மக்களைக் குழப்பும். இந்த தேசம் அழியப்போகிறது. ஜெய்ஹிந்த்.

அரசாங்கம் நடத்திய டிடி இன்றைய ஊடகங்களை விட நன்றாக இருந்தது. அதிக சக்தி இல்லையென்றால் அதிக செல்வாக்கு வரும்போது பொறுப்புகளும் அதிகமாகின்றன. அதிக அதிகாரம் வரும்போது நேர்மையற்ற அணுகுமுறையும் வந்துவிடுகிறது. உண்மையின் தரம் குறைந்துள்ளது. எல்லாம் டிஆர்பிக்காகத்தான். அதிகமான பணம்தான் டிஆர்பியின் மொழியைப் பேசும்".

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in