

சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆரவ்விற்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதன்படி இன்று (செப்டம்பர் 6) சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதர திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஆரவ் - ராஹி தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.