

'தில்லுக்கு துட்டு' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கவுள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'லொள்ளு சபா'. இதனை இயக்கியவர் ராம்பாலா. 2016-ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் ராம்பாலா.
அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் சந்தானம் நடிப்பில் 'தில்லுக்கு துட்டு 2' படத்தை இயக்கினார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனது படத்துக்கான கதைகளை ராம்பாலா உருவாக்கி வந்தார். தற்போது அவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மிர்ச்சி சிவா. முந்தைய இரண்டு படங்கள் போலவே, இதுவும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
இதில் ஆனந்த்ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக நிக்கி கல்ரானியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புத் தொடங்க ராம்பாலா திட்டமிட்டு வருகிறார். இந்தப் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.