Last Updated : 30 Aug, 2020 11:11 AM

 

Published : 30 Aug 2020 11:11 AM
Last Updated : 30 Aug 2020 11:11 AM

கரோனா கால சினிமா 6: தண்டிக்கப்பட்ட நியாயங்கள்- இனிய தாம்பத்யம் இடையே ஒரு நண்பன் 

இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்த படம் ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ (1983). ஒளிப்பதிவு, T.S.வினாயகம். இசை, சங்கர் கணேஷ்.

மூளை ஆபரேஷன் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் பிரபு (சிவகுமார்). ‘சின்னதா இருந்தாலும் கறை கறைதான். அது உடையில இருந்தாலும் சரி உள்ளத்துல இருந்தாலும் சரி என்னால பொறுத்துக்க முடியாது’ என்று வாழ்பவர் அவர். மருத்துவம் தொழிலாக இருந்தபோதும் கலைரசனையும் மிக்கவர். அவருடைய மனைவி ராதா (லட்சுமி). அவர் வழக்கமான மனைவி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்பவர். கணவன் எதிரே புடவை மாற்றவே கூச்சப்படுவர். இந்தத் தம்பதிக்கு லட்சுமி (பேபி மீனா) என்றொரு பெண் குழந்தை.

மகிழ்ச்சியாகவும் அன்யோன்யமாகவும் சென்றுகொண்டிருக்கும் குடும்பத்தில் பிரபுவுடைய நண்பர் ஓவியர் ராஜேஷ் (சிவச்சந்திரன்) வந்துசேர்கிறார். திரைக்கதையில் ஒரு திருப்பத்தையும் மாற்றத்தையும் உருவாக்கும் கதாபாத்திரம் இது. ராஜேஷ், ரசனையற்ற மனைவியுடன் குடும்பம் நடத்த இயலாமல் விவாகரத்துப் பெற்றுக்கொண்டவர். பிரபு படிப்பதற்கு உதவிய குடும்பத்தின் வாரிசு ராஜேஷ் என்பதால் நட்புடன் நன்றியுணர்வும் கொண்டிருக்கிறார் பிரபு. ராஜேஷ் கடுமையான குளிர் காய்ச்சலால் தவிக்கும்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கிறார் பிரபு. கூடமாட ஒத்தாசையாக இருக்கும்படி மனைவி ராதாவையும் நிர்ப்பந்திக்கிறார் பிரபு.

முதன்முறை ராஜேஷுக்கு ஊசி மருந்துசெலுத்துவதற்காக அவன் கையைப் பிடித்துக்கொள்ளும்படி பிரபு சொல்லும்போது, ராதா சேலையை ராஜேஷ் கையில் போர்த்திப் பிடிப்பார். பின்னர் வீட்டில் ஒருவருமற்ற நேரத்தில் மயங்கிவிழுந்த ராஜேஷைத் தொட்டுத் தூக்கிப் படுக்கையில் படுக்கவைக்க நேரிடுகிறது. பிரபுவிடம் இதைச் சொல்கையில் பிரபு அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட அட்வகேட் சிதம்பரத்தின் மூளையில் உருவான கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையைச் செய்து முடிக்க குறிக்கப்பட்ட நாளன்று பிரபுவின் திருமண நாள். சிகிச்சை காரணமாகக் கோவிலுக்குச் செல்ல முடியாமல் அம்மா படத்துக்கு முன்பே பிரபுவைக் கும்பிடுகிறார் ராதா. குனியும்போது தாலிச் சரட்டின் ஒரு பகுதி அறுந்து தரையில் விழுகிறது. பதறிப் போகிறார் ராதா. ராதாவைச் சமாதானப்படுத்திவிட்டு பிரபு மருத்துவமனைக்குப் புறப்படுகிறான். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கிறான். இரவில் நண்பன் ராஜேஷுக்கு விருந்து தருகிறார்கள்.

அப்போது ராஜேஷுக்கு மிகவும் பிடித்த பால் பாயசம் செய்திருக்கிறார் ராதா. அதைச் சாப்பிடும் ராஜேஷ், ‘இந்த ருசியை மாத்திரம் என்னால் வரைய முடிஞ்சிருந்தா நான் வரைந்த ஓவியங்கள்லேயே இதுதான் நம்பர் ஒன்னா இருக்கும்டா’ என்று கூறி பூரித்துப்போகிறார். திருமண நாளன்று எப்போதும் பாடும் பாடலை அன்றும் ராதா பாடுகிறார்; பின்னர் ராதா மூச்சுத்திணறலால் மயங்கிவிழுகிறார். அந்தத் திருமணநாள் ஏதோ விபரீதமான நாளாகப் படுகிறது ராதாவுக்கு.

மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் மனைவியின் பெருமையைப் பேசிவிட்டு வீட்டுக்கு வருகிறார் பிரபு. அங்கே மனைவி இல்லை. அவர் எழுதிவைத்த கடிதம் மட்டுமே இருக்கிறது. இடிவிழுந்ததுபோல் ஆகிவிடுகிறது பிரபுவுக்கு. கால் போன போக்கில் போகிறான். அதன் பின்னர் அந்தக் குடும்பம் என்ன ஆனது என்பது அதன் பின்னரான திரைப்படம்.

என்ன ஏதென்றே புரியாமல் வீட்டில் தனிமையில் பிரபு தவிக்கிறார். அவரது தவிப்பை, துயரத்தைக் காட்சிகளாகவே விவரித்திருப்பார் பாஸ்கர். லட்சுமி வரைந்த ‘வீட்டுக்கு முன்னே ஆமை இருக்கும்’ ஓவியம், மீன் தொட்டி தரையில் விழ, துடித்துக்கொண்டிருக்கும் மீன்கள், ‘அப்பா மீனு, அம்மா மீனு, நானு மீனு’ எனக் குழந்தை லட்சுமி கூறிய வார்த்தைகள் இவற்றைக் கொண்டே அந்தக் காட்சியை அருமையான சோக ஓவியமாகத் தீட்டியிருப்பார் பாஸ்கர்.

கணவன் மனைவி அன்யோன்யத்தை, மனிதரின் பிரியத்தை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். அநேக மிட் ஷாட்கள். எந்தக் கதாபாத்திரமும் கேமராவைத் தப்பித்தவறிக்கூடப் பார்ப்பதில்லை. அப்படியொரு நுட்பம். ஒரு கதைக்கு என்ன தேவையோ அதைத் தரும் காட்சியமைப்பு. காட்சியில் கதாபாத்திரங்கள் நிற்கும் இடங்கள், அவற்றின் தோரணை, உடல்மொழி, வசனங்கள் (‘இடிவிழுந்த வீட்டுக்கு யாருமே குடிபோக மாட்டாங்கப்பா’, ‘இது மாடு மேஞ்ச துளசி இனி மாடத்துல வைக்க முடியாது’), பார்வை, பின்னணி இசைத் துணுக்குகள் அவற்றை கேமரா உள்வாங்கியிருக்கும் விதம் என ஒவ்வொன்றும் திரைக்கதையை விவரிக்கும் போக்கு ரசிக்கவைக்கிறது. முழுமையான சினிமா அனுபவம் தருகிறது.

முற்பகுதியில் அலோபதி மருத்துவம் இழையாகப் பயன்படுகிறது என்றால், பிற்பகுதியில் நாட்டு மருத்துவம் இடம்பெறுகிறது. பங்களா போன்ற வீட்டைவிட்டு வந்த ராதா பார்வையற்றவராகவும் பூ விற்கும் பருவப் பெண்ணாக லட்சுமியும் (ரோகிணி) பாழடைந்த மண்டபத்தில் வசிக்கின்றனர். அந்த ஊருக்கு வருகிறார் பிரபு. இப்போது அவர் பரதேசியான தாடி பாபா. கணிதச் சூத்திரம் மூலம் அவிழும் கணக்கைப் போல் திரைக்கதையில் ஒவ்வொரு முடிச்சும் அழகாக விழுந்து அப்படியே அவிழ்கிறது. அதுதான் இந்தத் திரைக்கதையின் தனித்துவம்.

அன்று தனக்கும் ராஜேஷுக்கும் இடையே என்ன நடந்தது என்பதை பாபாவிடம் அவர் யாரென்பதே தெரியாமல் ராதா சொல்வார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டே இருப்பார் பாபா. படித்துறையில் நடக்கும் இந்தக் காட்சி உணர்வுமயமானது. விபத்தில் சிக்கிய லட்சுமியை பாபா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை வழியே காப்பாற்றுவார். இறுதியில் பாபா யார் என்பது தெரிந்தபின்னர் ராதா என்ன செய்கிறார், பாபா குடும்பத்துடன் சேர்கிறாரா என்பதை யூடியூபில் கிடைக்கும் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரே ஒரு கணம் மனம் தடுமாறியதால் இவ்வளவு பெரிய தண்டனையா? உண்மையில் உடம்பு மனம் இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? ஆண், பெண் உறவு, குடும்ப அமைப்பு, மரபு, நவீனம் இவை தொடர்பான பல உணர்வுபூர்வக் கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ராதா ஏன் ஊரை விட்டு ஓடி வந்தார்? ராஜேஷ் ஏன் தனக்கு அப்படி ஒரு தண்டனையை அளித்துக்கொண்டார்? பிரபுவால் ஏன் குடும்ப வாழ்வுக்குள் மீண்டும் வர இயலவில்லை? ஓவியத்தைப் பார்த்துப் புரிந்துகொள்வதுபோல் அவரவர் புரிதலுக்குத் தகுந்த வாய்ப்பைப் பார்வையாளர்களுக்கு இயக்குநர் அளித்துள்ளார்.

படத்தின் தலைப்பிலிருந்து இறுதிவரை அனைத்தையும் அலசிப் பார்த்து பார்வையாளர்கள் ஒரு முடிவுக்கு வரலாம். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தைப் பிறருடன் விவாதிக்கலாம். அப்படியோர் அம்சத்தைத் திரைக்கதையில் புழங்கவிட்டிருப்பது செய்நேர்த்திக்கு உதாரணம். பாஸ்கர் இயக்கிய படங்களில் தீவிரமான படம் இது. இதிலும் திரைக்கதைதான் முதுகெலும்பு. அது மிகவும் தெளிவு, நேர்த்தி. ஆனால், ராதா குளியலறையில் மயங்கிவிழும் அந்தத் தருணத்தில் அப்படியொரு நிகழ்வுக்குச் சாத்தியமா எனும் கேள்வி எழுகிறது. ஆனால், திரைக்கதையை நகர்த்த சில லாஜிக் மீறல் தேவைப்படுகிறது என்னும் அம்சம் அந்தக் கேள்வியை நீர்த்துப்போகச் செய்கிறது.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை அரசின் அனுமதிபெற்று, படம்பிடித்து அதைப் படத்தின் டைட்டில் காட்சியில் பயன்படுத்தியிருக்கிறார் பாஸ்கர். தமிழ்த் திரையுலகின் முக்கியப் படங்களில் ஒன்றாக இடம்பெறத் தகுதிகொண்ட படம் இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x