சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் எஸ்பிபி விழிப்புடன் இருக்கிறார்: மருத்துவமனை தகவல்

சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் எஸ்பிபி விழிப்புடன் இருக்கிறார்: மருத்துவமனை தகவல்

Published on

சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் எஸ்பிபி விழிப்புடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 தொற்று காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளுடன் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விழிப்புடன், சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார். தொடர்ந்து எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது."

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in