ஓடிடியில் வெளியாகிறதா 'பார்ட்டி'? - தயாரிப்பாளர் மறுப்பு

ஓடிடியில் வெளியாகிறதா 'பார்ட்டி'? - தயாரிப்பாளர் மறுப்பு
Updated on
1 min read

ஓடிடியில் 'பார்ட்டி' திரைப்படம் வெளியாகவுள்ளதாகச் செய்தி வெளியான நிலையில், இதற்கு தயாரிப்பாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா, நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பாடல்கள், ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், இன்னும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

பிஜி தீவிலேயே படப்பிடிப்பை முடித்திருப்பதால், அது தொடர்பான கடிதத்தைப் பெறுவதற்காகப் படக்குழு தீவிர முயற்சி செய்துவருகிறது. அந்தக் கடிதம் வந்துவிட்டால் படம் உடனே வெளியாகிவிடும்.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தலால் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இந்தப் படங்களின் பட்டியலில் 'பார்ட்டி' படமும் இடம்பெற்றது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருப்பதால், இது உண்மையாக இருக்கும் எனப் பலரும் கருதினார்கள்.

இந்நிலையில், 'பார்ட்டி' படம் ஓடிடி வெளியீட்டுச் செய்தி தொடர்பாக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"எங்களுடைய அடுத்த படமான 'பார்ட்டி' திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகிறது என்ற செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியானது எங்கள் கவனத்துக்கு வந்தது. எங்களிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லையென்பதால் இதுபோன்ற வதந்திகளை நாங்கள் மறுக்கிறோம். இதற்காக எங்கள் வலியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறோம்.

சரியான நேரத்தில் திரைப்பட வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்பதை அனைவரிடமும் தெரிவிக்க விரும்புகிறோம். எனவே, எந்தவித போலிச் செய்தியையும் பரப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருக்கிறோம்".

இவ்வாறு தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in