அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்: எஸ்.பி சரண் உருக்கம்

அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்: எஸ்.பி சரண் உருக்கம்
Updated on
1 min read

அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம் எனவும் எஸ்.பி சரண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரதிராஜா, இதில் ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனிடையே, தனது தந்தையின் உடல்நலம் குறித்து தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார் எஸ்.பி.பி சரண். இன்று (ஆகஸ்ட் 20) அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

"அப்பாவின் உடல்நிலையில் மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே உங்களிடம் கூற புதிதாக எதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்ததைப் போல, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்பாவுக்காக, எங்கள் குடும்பத்துக்காகச் செய்யப்படும் அத்தனை பிரார்த்தனைகளும் கண்டிப்பாக அவர் விரைவில் குணமடைய உதவும் என நம்புகிறோம்.

தேசத்திலிருக்கும் திரைத்துறை, இசைத்துறையினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு ஒன்று சேர்ந்து, அப்பாவுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த அன்புக்கு, எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம்.

உலகம் முழுவதிலும், எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். என் அப்பாவின் நலனுக்காக இந்தக் கூட்டுப் பிரார்த்தனையை முன்னெடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

நன்றி சொல்ல வார்த்தையில்லை. தலை வணங்குகிறோம். இந்தப் பிரார்த்தனைகள் எதுவும் வீண் போகாது. கடவுளுக்கு மனசாட்சி உண்டு. அவர் கண்டிப்பாக அப்பாவை நமக்காக மீட்டுத் தருவார். அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றி. நீங்கள் செய்யும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் என் குடும்பம் இன்று தைரியமாக உணர்கிறது. மீண்டும் அனைவருக்கும் நன்றி"

இவ்வாறு எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் எஸ்பி சரண் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறார். அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே பேசுவது போல இருக்கிறது. குரல் பல இடங்களில் தழுதழுக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in